வி.ஐ.டி.யில் 163 மாணவர்களுக்கு கொரோனா… வடமாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் பரவிய தொற்று : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்..!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 4:28 pm
Quick Share

சென்னை : வட மாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோய் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கிய மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், நோயாளிகளுக்கு கால்களை சுத்தப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது :- யானைக் கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை திமுக ஆட்சியில் 2010ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று நான்காம் நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8023 பேர் யானைக்காலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கை கால்களை கழுவுவது மிக அவசியம். அதற்கான செயல்முறை இன்று காண்பிக்கப்பட்டுள்ளது. யானைக்கால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் நோய் பரவாது. நோயாளிகளை கடித்த கொசு மற்றவரை கடிக்கும் போது தான் நோய் பரவும்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 100க்கும் கீழ் நோய் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் பதிவாகிறது. கேரளா மத்திய பிரதேசம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தொற்று பரவுகிறது. அண்ணா பல்கலையில் 23 பெருக்கு தொற்று உள்ளது. விஐடியில் 5600 பேர் உள்ளனர். 80% பேர் வட மாநிலத்திலிருந்து வ்ந்தவர்கள். 12,13 ஆகிய தேதிகளில் நோய் பரவ தொடங்கி நேற்று வரை 118 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று மேலும் 45 பேருக்கு என மொத்தம் 163 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 1500 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பத்து நாட்களில் அனைவரும் குணமடைந்து விடுவார்கள். மேலும், ஐஐடி மற்றும் சத்ய சாய் கல்லூரியில் மாணவர்கள் குணமடைந்து விட்டனர். இதே போல் விஐடி யும் கட்டுக்குள் வரும்.

விஐடி மாதிரிகள் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை சத்ய சாய், ஐஐடி, அண்ணா பல்கலையில் பெரும்பாலும் BA2 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டும் BA3 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு தடுப்பூசியே காரணம். இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக வரும் 12ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது, என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 13 நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என்றும் கூறினார்.

Views: - 626

0

0