திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கு? ட்விட்டரில் கே.எஸ் அழகிரி காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 9:00 pm
KS Azhagiri and Annamalai - Updatenews360
Quick Share

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி குறித்து விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டது. மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை.

அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழலில் நரேந்திர மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூபாய் 526 கோடி என்ற விலையில், 126 ரபேல் விமானங்களை 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியிலோ 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒரு விமானத்தின் விலையை ரூபாய் 1670 கோடியாக அதிகரித்து மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஊழல் இல்லையா என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகால ஆட்சி குறித்து பா.ஜ.க.வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிற போது, மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆதரவினால் தான் கௌதம் அதானியின் அசுர வளர்ச்சி ஏற்பட்டது என்பதை பகிரங்கமாக குற்றம் சாட்ட விரும்புகிறோம்.
10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் மற்றும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் மீது இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் இவர்கள் மீது ஊழல் வழக்கு இருப்பதாக பா.ஜ.க.வினரால் கூற முடியுமா? பிரதமர் பதவி தம் மீது திணிக்கப்பட்ட போது அரசியல் பேராண்மையோடு மறுத்தவர் அன்னை சோனியா காந்தி. பதவி மறுப்பாளர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை களங்கப்படுத்துகிற முயற்சிகளில் பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வினரோ வெற்றி பெற முடியாது.

தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 விலையைக் குறைத்திருக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி தி.மு.க. ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க.விற்கு என்ன அருகதை இருக்கிறது?

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது.’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 657

0

0