காமராஜர் கொண்டு வந்ததும் திராவிட மாடல் தான்.. ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம் : ஆ. ராசா பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 9:47 pm
A Raja - Updatenews360
Quick Share

காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் என கோவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியுள்ளார்.

திராவிட மாடல் தான் தேசிய மாடல் என்ற தலைப்பில் கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் பயிலரங்கம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ. ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முன்னதாக தலைமை வகித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல்.சில பேர் குஜராத் மாடல் என்கிறார்கள்.அங்கு மின்வெட்டு உள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கிவருவது திராவிட மாடல். ஒன்றிய திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தடங்களால் சிலநாட்கள் மின்வெட்டு இருந்தது.பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் நம்முதல்வரின் ஆட்சியை பார்த்து பாராட்டி வருகின்றனர். அதுதான் நம் முதல்வரின் திராவிட மாடல் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது போல சகமனிதனை மனிதனாக நினை எனத்தான் கூறி வருகிறோம். அதுதான் நமது அடிப்படை. ஒன்றிய அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு எவ்வளவு தடைகளை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி.,பேசும்போது
தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும்பொழுதே ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன்.
திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில்பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன் என்றார்.

பின்னர் பூனா கருத்தரங்கிற்கு நான் சென்றபோது பைலட் செல்ஃபி எடுக்க முற்பட்டார். அப்போது அவரிடம் விசாரித்தபோது அதற்கு பைலட் 2ஜி என என்னை தெரிவித்தார்.என்னை எங்கே வரை கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா என நகை சுவையாக கூறினார்.

தொடர்ந்து கூறிய அவர், வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல். வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள். கல்வியை மறுத்த மதம் சனாதன மதம். இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள். சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள். அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர்.
பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஆரிய மாடல் திராவிட மாடலை கவனித்து பாருங்கள்.

பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல பெண்ணியம், சாதி ஒழிப்பு பெண்களுக்கு சொத்தில் பங்கு. சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அதுவே சேரிகளாக மாறியது. 1996 ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார்.செவிடன் குருடன் நொண்டி என அழைக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி என அழைக்கப்பட்டனர். இது கலைஞர் ஆட்சியில் நடைபெற்றது. அலி அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது திராவிட ஆட்சியில் நடந்தது. இருளர் சமுதாயத்தை தேடிச்சென்ற உதவியவர் முதல்வர் ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல். காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம். எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம். ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கிப் பிடிப்போம் என உரையை முடித்தார்.

Views: - 740

0

0