மீண்டும் சட்டவிரோத பைக் ரேஸ்: 4 இளைஞர்கள் கைது…காஸ்ட்லி பைக்குகள் பறிமுதல்…கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

Author: Rajesh
2 May 2022, 10:45 pm
Quick Share

சென்னை: அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 பேரை சென்னை போக்குவரத்து காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டறிந்து கைதுசெய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

image

அவரது உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சட்டம்- ஒழுங்கு காவலர்கள் மற்றும் ஆயுதப்படைக்காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.க.பாலம் வரை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ECR, GST சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அண்ணாசாலை, தாராப்பூர் டவர் சிக்னல் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த இளைஞர்கள் தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் பரவியது. இது தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் விசாரணை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட தி.நகரைச் சேர்ந்த மணிகண்டன், ஹரிஹரன், ஆகிய இருவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யபப்பட்டது.

image

கைதான மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய், அயனாவரத்தைச் சேர்ந்த ஜான் ஜெபகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு விலையுயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜான் ஜெபகுமார் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை பெருநகர காவல்துறையினர் ஏற்கெனவே தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைதுசெய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

image
Views: - 659

0

0