கொரோனாவில் இருந்து மீண்டு வந்த காவலர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
4 August 2020, 3:15 pmஅரியலூர்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க கரவொலி எழுப்பி காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், தா.பழுர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கீதா மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் உஷாராணி உள்ளிட்ட மூன்று பேரும் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. ஶ்ரீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் இசை வாத்தியங்கள் முழங்க மலர்கள் தூவி கரவொலி எழுப்பி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் வீடு திரும்பிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூவருக்கும் மலர் கொத்து மற்றும் பழக்கூடை கொடுத்து வரவேற்றார். இது பாதிக்கபட்ட காவலர்கள் மட்டுமின்றி சக காவலர்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.