பந்தை கிரிக்கெட் பேட்டால் தொடர்ந்து 59 நிமிடங்கள் 47 வினாடிகள் தட்டி அசத்திய பள்ளி மாணவன் : உலக சாதனைக்கு குவியும் பாராட்டு…

Author: kavin kumar
5 February 2022, 6:31 pm
Quick Share

சேலம் : சேலம் அருகே தனியார் பள்ளி மாணவன் கிரிக்கெட் மட்டையால் பந்தை 59 நிமிடங்கள் 47 வினாடிகள் தட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர் ஆர்.ஆர்.விஸ்வநாத் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பயிற்சியாளர்கள் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 332 முறை கிரிக்கெட் மட்டையில் பந்தினைத் தட்டியும், தொடர்ச்சியாக 59 நிமிடங்கள் 47 வினாடிகள் மட்டையின் பக்கவாட்டிலிருந்து பந்தினைத் தட்டியும் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் கிரிக்கெட் மட்டையில் 283 முறை பந்தினைத் தட்டியதே இதற்கு முன்பான உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

இப்போது அந்த சாதனையை முறியடித்ததுடன், புதிய சாதனையாக 59 நிமிடங்கள் 47 வினாடிகள் மட்டையின் பக்கவாட்டிலிருந்து பந்தினைத் தட்டியும் உலக சாதனை படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முதல்நிலை பயிற்சியாளர் டி.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் ஸ்கோரர் வி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் செய்துகாட்டினார். டைம் கீப்பர்களாக எம்.ராஜாகனி, கே.மருது ஆகியோர் செயல்பட்டனர். உலக சாதனை படைத்துள்ள மாணவர் விஸ்வநாத்,
மாணவரின் தந்தை ரவிச்சந்திரன், பள்ளி உடற்கல்வி இயக்குநர் வி.ஜெயக்குமார், கிரிக்கெட் பயிற்சியாளர் எம். பற்குணம் ஆகியோரை பள்ளி முதல்வர் எஸ். டோமினிக் சேவியோ வெகுவாகப் பாராட்டினார்.

Views: - 942

0

0