சாலையில் சென்றவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபர் கைது
Author: kavin kumar22 October 2021, 5:58 pm
சென்னை: சென்னையில் கடைகள் மற்றும் சாலையில் சென்றவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாசன் 62 இவர் கடந்த 10 வருடங்களாக கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியில் வீட்டு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கத்தியை காட்டி மிரட்டி ஒரு நபர் பணம் பறித்து சென்றுள்ளார். இது குறித்து தேவதாசன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மீண்டும் அந்த கடைக்குச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இது குறித்து உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் அதே பகுதியில் சுற்றித் திரிந்த எம்.கே.பி நகர் 10 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாபு என்கின்ற பல்லு பாபு வயது 52 என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பல்லு பாபு மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0