ஸ்டாலினின் மனைவி அழகாக இருக்கிறார் கூறிய கஞ்சா வியாபாரி கொலை : குற்றவாளிகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

Author: kavin kumar
10 February 2022, 1:17 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டி வனத்து சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜான் அலெக்ஸ்சாண்டர் ( 40) என்பவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். கொலை நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குகேகார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கொலையில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர். இந்த கொலை தொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு தோமையார்புரம் அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் அலெக்சாண்டரை கொலை செய்துவிட்டு தப்பி வந்து மறைந்து இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் (40), சைஜூ (25), நோவா (20), பாஸ்கர் (22), ஆரோக்கியதாஸ் (26), தோமையார்புரத்தை சேர்ந்த மாதவன் (32) ஆகியோரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜான்அலெக்சாண்டர் சென்னையில் குடும்பத்தோடு தங்கி டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்ததாகவும், அவ்வப்போது திண்டுக்கல் வரும் ஜான் அலெக்சாண்டர் தனது நண்பரான சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா மற்றும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் ஜான் அலெக்சாண்டரும், ஸ்டாலினும் இருந்துள்ளனர். அப்போது ஜான் அலெக்ஸ்சாண்டர் ஸ்டாலினிடம் உன் மனைவி அழகாக இருக்கிறாள். என கூறியதோடு அவரை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் தனது நண்பர்களுடன் இனைந்து ஜான் அலெக்சாண்டரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் சிறுநாயக்கன்பட்டி சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் இருந்த ஜான் அலெஸ்சாண்டரை ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து என் மனைவியை தவறாக பேசுவதா என ஸ்டாலின் கேட்டதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களை தாக்க தொடங்கியுள்ளனர்.

உயிருக்கு பயந்து தப்பி ஓடிய ஜான் அலெக்சாண்டரை விரட்டி வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, அரிவாள் ஆகிய 6 ஆயுதங்களையும், தப்பி ஓடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இரண்டு சக்கர வாகனங்களையும் போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகளை 6 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தாலுகா இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Views: - 931

0

0