நாளை மறுநாள் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் : பாஜக காட்டிய திடீர் அதிரடி… காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
18 February 2022, 7:16 pm
Quick Share

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகளுக்கு பாஜக அதிர்ச்சி கொடுத்து அதிரடி காட்டியுள்ளது.

117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 20ம் தேதி தேர்த்ல் நடைபெற இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

rahul-modi-2-updatenews360

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனால், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்ட அரசியல் கட்சிகள் வெற்றி தங்களின் பக்கம் என்று மனக்கணக்கு போட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநில தேர்தலை பொறுத்தவரையில் வெற்றியாளர்களை தீர்மானிப்பவர்கள் அங்குள்ள சீக்கியர்கள்தான். எனவே, அவர்களுக்கு ஏற்றாற் போல வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி விசியுள்ளன. மேலும், சீக்கியர்களை கவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பாஜக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடி தனது அரசு இல்லத்தில் சீக்கியர்களுடன் ஒரு முக்கியச் சந்திப்பு நடத்தினார். இதில், பஞ்சாப்பின் ஆன்மீக மடங்களான டேராக்களின் தலைவர்களும், சீக்கிய மதத்தின் முக்கியத் தலைவர்களும் இடம்பெற்றனர்.

இக்குழுவில், டெல்லியின் குருத்துவாரா கமிட்டியின் தலைவர் ஹர்மித்சிங் கால்கா, பத்மஸ்ரீ விருது பெற்ற பாபா பல்பீர்சிங்ஜி சீச்சேவால், சேவாபந்த்தி, யமுனா நகரை சேர்ந்த மஹந்த் கரம்ஜித்சிங் ஆகிய சீக்கிய தலைவர்கள் இருந்தனர்.

டேராக்களின் தலைவர்களில் கர்னாலின் பாபா ஜங்சிங், பாபா ஜோகாசிங், அம்ருத்ஸரின் பாபா தார்சிங் மற்றும் சந்த் பாபா மேஜர்சிங்வா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றிருந்தனர். பஞ்சாப்பின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் சுமார் 27 வருடங்களாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தனியாகப் பிரிந்துவிட்டது. இதனால், இந்தமுறை தேர்தலில் பாஜக தன் தலைமையிலான புதிய கூட்டணி அமைத்துள்ளது. இதில், அகாலி தளத்தின் பிரிவான சுக்தேவ் தின்ஸாவின் அகாலி தளம் சம்யுக்த் மற்றும் கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் புதிய கட்சியாக பஞ்சாப் லோக் காங்கிரஸையும் சேர்த்துள்ளது.

எஸ்ஏடி தலைமையிலான கூட்டணியில், உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சாமாஜை சேர்த்துள்ளது. காங்கிரஸுடன் சரிநிகர் போட்டியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி தன் தலைமையில் அமைத்த கூட்டணியில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சாவை சேர்த்துக்கொண்டுள்ளது. இது, பஞ்சாபின் விவசாயிகளால் டெல்லி போராட்டத்திற்கு பின் துவக்கப்பட்ட புதிய கட்சி. இதுபோல் யாருடனும் கூட்டணி இன்றி காங்கிரஸ் மட்டுமே தனித்து போட்டியிடுகிறது.

எனவே, பலமுனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னதாக சீக்கியத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருப்பது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

Views: - 883

0

0