ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்தில்குமார் ஆய்வு…

Author: kavin kumar
25 January 2022, 6:34 pm
Quick Share

தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினார்.

தருமபுரி-சேலம் மாவட்டத்திற்கு இடையில் காவிரியாறு மேட்டூரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகமரை ஒட்டனூர் பகுதிகளில் இருந்து காவிரி ஆற்றை பரிசலில் கடந்து பண்ணவாடி கோட்டையூர் பகுதிகளுக்கு மக்கள் அன்றாட பணிகளுக்கும் பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இதில் ஈரோடு, கோவை, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு காவிரி ஆற்றை பரிசல் மூலமாக கடந்து சென்று வருகின்றனர். இந்த காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் இருந்தால் வெளியூர் வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் வசதியாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வழங்கினார். அதில் தருமபுரி சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒட்டனூர் முதல் கோட்டையூர் வரை 800 மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு இன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அப்பகுதிகளை பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினார். அப்பொழுது நீண்ட நாட்களாக பரிசலில் பயணம் சென்று வரும் தங்களுக்கு தமிழக முதல்வரால் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்தி தரவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இத்தனை ஆண்டுகாலமாக மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்த தங்களுக்கு பாலம் கட்டப்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பேசியதாவது:- தருமபுரி, சேலம் மாவட்டங்களை இணைக்கும் நாகமரை பண்ணவாடி மற்றும் ஒட்டனூர் கோட்டையூர் பரிசல் துறையில் பாலம் வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்கபடும் என வாக்குறிதி அயித்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த இரண்டு பகுதிகளையும் ஆய்வு செய்ததில், நாகமரை-பண்ணவாடி பகுதி நீண்ட தூரம் இருப்பதால் அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஆனால் கோட்டையூர் பகுதியில் 800 மீ தூரம் மட்டுமே இருப்பதால்,

இங்கே பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தற்போது தமிழக முதல்வர் ரூ 250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பாலம் விரைவில் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஈரோடு, கோவை, கேரளா, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்படிப்பிற்கு பயன்படும். அதேபோல் கேரளா, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து மைசூர் செல்லும் வாகனங்கள் சேலம் வழியாக செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது எனவும், இந்த வழியாக செல்லும் பொழுது, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் குறையும். தற்போது இந்த பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என தெரிவித்தார்.

Views: - 1756

0

0