KMCH மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..!!

Author: Rajesh
30 January 2022, 2:40 pm
Quick Share

கோவை: கே.எம்.சி.எச் மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய நவீன வகை மருத்துவ கருவிகளை தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மேற்கு மண்டல பகுதியில் அதி நவீன மருத்துவ வசதிகள் கொண்ட முன்னனி மருத்துவமனையாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் புதிதாக துவங்கப்பட்ட கே.எம்.சி.எச். மருத்து கல்லூரி பொது மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப்,,எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி.ஸ்கேன் கருவிகள் துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண்.என்.பழனிசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புதிய மருத்துவக் கருவிகளை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பகுதி வாழ் மக்களுக்கு கே.எம்.சி.எச்.பல்நோக்கு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தலைநகராக தமிழகம் இருப்பதாகவும், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் அளவிற்கு அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு துறையின் வாயிலாக பல்வேறு மக்கள்வநலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் என பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

துவக்க விழாவில் மருத்துவகல்லூரி மருத்துவமனை பல்வேறு நிலை நிர்வாகிகள், மருத்துவர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 991

0

0