இருளில் மூழ்கியிருந்த மலை கிராமத்திற்கு ஒளி விளக்கு ஏற்றிய தமிழக அரசு
30 September 2020, 7:21 pmதருமபுரி மாவட்டத்தில் மாநில அளவில் சுமார் 2 சதவீதம் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சித்தேரி, சிட்லிங், ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு, வத்தல்மலை, பிக்கிலி மலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களின் அடிப்படை தேவைகளை மத்திய, மாநில அரசுகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. அரசின் திட்டங்கள், இப்பகுதி மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதற்கு தொடர்ந்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் காரப்பாடி மலை கிராமத்திற்கு,மின்சார வசதி செய்து தரக்கோரி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் ரூ.31 லட்சத்து 90 ஆயிரம்; மதிப்பீட்டில் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் 172 மின் கம்பங்கள் நடப்பட்டு 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் பாதை காரப்பாடி மலை கிராமத்துக்கு அண்மையில் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம், காரப்பாடி மலை கிராமத்தின் ஒவ்வொரு இல்லங்களுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மின் விளக்கு வசதியை தங்கள் கிராமத்தில் பார்த்திராத காரப்பாடி மலை கிராம மக்கள் இந்த நடவடிக்கையின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, அகல் விளக்கு உள்ளிட்ட ஒளியில் படித்து வந்த இங்குள்ள மாணவ, மாணவியர் தற்போது மின் விளக்கு வெளிச்சத்தில் உத்வேகத்துடன் இரவு நேரங்களில் பாடங்களை பயிலத் தொடங்கியுள்ளனர். இல்லத்தரசிகள் மின் விளக்கு வெளிச்சத்தில் சமையல் பணிகளை மேற்கொள்கின்றனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் உதவியுடன் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் அறிந்து வருகின்றனர்.