பழங்கால செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை ஆட்சியரிடம் ஒப்படைத்த முதியவர்கள்…
Author: kavin kumar26 October 2021, 5:38 pm
தருமபுரி: அரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை மாவட்ட ஆட்சியரிடம் முதியவர்கள் ஒப்படைத்தனர்.
தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மாணிக்க ஆச்சாரி. அவருக்கு தங்கவேல், பழனி, ராமமூர்த்தி என மூன்று மகன்கள் உள்ளனர். தற்பொழுது வெள்ளாளப்பட்டியில் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது முன்னோர்கள் தீர்த்தமலையில் உள்ள பிரசித்தி பெற்ற பழங்கால தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது கோவிலுக்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் ஒன்று இவர்களது வீட்டில் இருந்து உள்ளது. ஆனால் முன்னோர்கள் தற்பொழுது உயிரிழந்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள், தற்போது உள்ளவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில் தங்கவேல் தான் வசித்து வந்த வீடு பழுதாகியதால் அதனை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். அப்பொழுது வீட்டில் இருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது வீட்டில் செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தங்கவேல் குடும்பத்தினர் தங்களிடம் உள்ள தீர்த்தமலை கோவிலுக்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டையம் மற்றும் வீர வாளினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் திவ்யதராசினியை நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்த செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து பழங்கால பொருட்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தருமபுரி மாவட்ட தொல்லியல் துறைக்கு சொந்தமான அகழ் வைப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் செம்பு பட்டையில் உள்ள தமிழ் எழுத்துகள் இருப்பது குறித்தும் இந்த பொருட்கள் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தங்கள் வீட்டில் இருந்த பழங்கால செம்பு பட்டையம் மற்றும் வீர வாளினை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த முதியவர் தங்கவேல் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர், வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.
0
0