அஞ்சல் அலுவலகத்தை பூட்டு போட முயன்ற காங்கிரசார்! தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!!
28 August 2020, 2:20 pmதிருப்பத்தூர் : வாணியம்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட்தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் 10 க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் பஜார் பகுதியில் உள்ள இந்திய துணை அஞ்சல் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி வந்தனர்.
அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி ஐந்து பேரை மட்டும் அனுமதித்தனர். அப்போது திடீரென அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 15 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.