மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகன்… காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் நிகழ்ந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 2:09 pm
Quick Share

ராணிப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மனைவியின் தந்தையை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிதரன் (45). இவருக்கு திருமணமாகி இரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான சினேகாவிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சிநேகா, பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு ஒருசில நாட்கள் முன்பு அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டார். இப்போது சினேகாவிற்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், தந்தை சசிதரனும், மகள் சினேகாவும் பக்கத்து பக்கத்து கிராமத்தில் உள்ள காரணத்தினாலும், கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த சசிதரனுக்கு கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ள காரணத்தினாலும், அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது, இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச வந்த சசிதரன் அவ்வழியே கொண்டிருந்த விக்னேஷும் சசிதரனும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரமடைந்த சினேகாவின் கணவரும் சசிதரனின் மருமகனுமான விக்னேஷ் மற்றும் அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சசிதரனை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சசிதரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் சசிதரனின் மருமகனான விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்

காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருமகனே மாமனாரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1235

0

0