உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முறைகேடு: 3 பேர் குழு விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…
17 August 2020, 9:16 pmமதுரை: தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற 969 உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் குழு விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தென்னரசு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.
இதே கோரிக்கைக்காக பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனுதாரர்கள் முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளது.