ஈஷாவில் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய யக்‌ஷா திருவிழா: Sadhguru Tamil யூ- டியூப் சேனலில் நேரலை..!!

Author: Rajesh
3 March 2022, 6:13 pm
Quick Share

மஹாசிவராத்திரியையொட்டி கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் யக்‌ஷா கலை திருவிழா சிறப்பாக தொடங்கியது.

முதல் நாளான நேற்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் கர்நாடக இசை கலைஞர் திரு. அபிஷேக் ரகுராம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன் திரு. ஹெச். என். பாஸ்கர் அவர்கள் வயலினும், திரு.அனந்த கிருஷ்ணன் அவர்கள் மிருதங்கமும் இசைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது, யோகம் நாகஸ்வாமி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள திரு.அபிஷேக் அவர்கள் நியூயார்க், லண்டன், சிங்கப்பூர், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் முக்கிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடிய சிறப்புமிக்கவர்.

பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களை மக்கள் ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் இந்த யக்‌ஷா கலை திருவிழா 3 நாட்கள் தினமும் இரவு 7 மணிக்கு ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது. மார்ச் 3ம் தேதி வித்வான் திரு. குமரேஷ் மற்றும் திருமதி. விதுஷி ஜெயந்தி குமரேஷ் அவர்களின் வயலின் நிகழ்ச்சியும், மார்ச் 4ம் தேதி புன்யா டான்ஸ் கம்பெனியின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து மார்ச் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தினமும் ஆதியோகி திவ்ய தரிசனமும் நடக்கும். இந்நிகழ்ச்சிகளை Sadhguru Tamil யூ- டியூப் சேனலில் இணையதளம் வாயிலாக கண்டு களிக்கலாம்.

Views: - 555

0

0