பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி…50 பேர் படுகாயம்…தொழுகையின் போது பேரதிர்ச்சி..!!

Author: Rajesh
4 March 2022, 5:50 pm
Quick Share

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் மாகாணத்தில் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் ஜாமியா மசூதி உள்ளது. வழக்கம் போல் இன்றும் மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அச்சமயம் எதிர்பாராத விதமாக திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மக்களே மருத்துவமனையில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மசூதியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Views: - 1079

0

0