ஆப்கானிஸ்தானில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்: 2 போலீசார் பலி..!!
28 January 2021, 1:14 pmகாபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 4 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 4 வெவ்வேறு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் காலை 8.04 மணிக்கு முதல் குண்டுவெடிப்பு நடந்தது. காந்த கண்ணிவெடி தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து சலீம் கர்வான் பகுதியில் போலீசாரின் வாகனம் ஒன்றை இலக்காக கொண்டு அடுத்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3வது குண்டுவெடிப்பு காபூலின் ஷார் இ நா பகுதியில் நடத்தப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதன்பின்னர் காபூல் நகரின் மேற்கு பகுதியில் கோலாயீ தவகானா பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. இந்த 4வது குண்டுவெடிப்பு தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.
இதுவரை, தலீபான் அமைப்பு உள்பட எந்தவொரு பயங்கரவாத குழுவும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்று கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0
0