அமெரிக்காவின் 4 மாகாணங்களில் தடுப்பூசி விநியோகிக்க திட்டம்…!!
18 November 2020, 10:30 amவாஷிங்டன்: பைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிக்கு மோசமான பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. தடுப்பூசி வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னணி மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகிய 4 மாகாணங்களில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
இதனையொட்டி பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொடர்புடைய அமெரிக்க அமைப்புகளுடன் எங்கள் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இது, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான திட்டமிடல், வரிசைப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாகாணங்கள் மூலம் பெறப்படும் அனுபவத்தை கொண்டு, அமெரிக்கா முழுவதும் இந்த கற்றல் திட்டம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் பைசர் நிறுவனம் கூறியுள்ளது.