‘நான் பதவி விலக மாட்டேன்…யாரை கண்டும் அஞ்சி கைவிட்டு செல்ல மாட்டேன்’: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்..!!

Author: Rajesh
27 April 2022, 3:20 pm
Quick Share

கொழும்பு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்சே கூறியதாவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தற்போதை பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அமைப்புக்கள் மட்டுமின்றி, நட்பு நாடுகள் நமக்கு இந்த சந்தர்ப்பத்தில் உதவிகளை வழங்க முன் வந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பிரதமருடன் நான் உரையாடினேன்.
ஏனைய நாடுகளின் பிரதமர்களுடன் கலந்துரையாடி உள்ளேன். அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்து உள்ளனர். இந்த பிரச்னைகளை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகின்றேன். மக்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்புக்களை நீங்கள் தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

என்னை பதவி விலக வேண்டாம் என கூறுகின்றீர்கள். நான் பதவி விலக மாட்டேன். பதவியிலிருந்து நீக்க முடியும். யாரையும் கண்டு அஞ்சி கைவிட்டு செல்ல மாட்டேன் என்பதை நினைவுப்படுத்திக் கொள்கின்றேன் என கூறினார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மகிந்த ராஜபக்சே தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது. நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பல அரசியல் அமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை தூண்டிவிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 1387

0

0