“வங்காள விரிகுடாவில் மூழ்கிய பிரம்மாண்ட சரக்குக் கப்பல்” - 2 பேர் மீட்பு, மாயமான 22 பேரைத் தேடும் பணி தீவிரம்!

24 Aug 26

புவனேஸ்வர்:

 ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து இரும்புத் தாது ஏற்றிக்கொண்டு சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல் வங்காள விரிகுடா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 22 பேரைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

விபத்தின் பின்னணி:

சரக்கு மற்றும் பயணம்: பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்.வி. ஓசியன் வின்னர்' என்ற இந்தச் சரக்குக் கப்பல், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து சுமார் 72,000 டன் இரும்புத் தாது கனிமங்களை ஏற்றிக்கொண்டு சீனா நோக்கிப் புறப்பட்டது.

விபத்து நடந்த இடம்:

ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 230 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது, சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 11.48 மணியளவில் கப்பலுடனான தகவல் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டது. கப்பல் ஒருபுறமாகச் சாய்ந்து வெறும் 8 நிமிடங்களுக்குள் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

கப்பலில் இருந்தவர்கள்:

இந்தக் கப்பலில் மொத்தம் 24 மாலுமிகள் பயணித்துள்ளனர். இவர்களில் 20 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.

துரிதமான மீட்புப் பணிகள்:

கப்பலின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ரீ விஜயபுரத்தில் (முன்பு போர்ட் பிளேர்) உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடனடியாக மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டது.

2 பேர் மீட்பு:

விபத்து நடந்த பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்த 'எம்.டி. ஈசோபோஸ்' என்ற வணிகக் கப்பலை மீட்புப் பணிக்கு MRCC திருப்பிவிட்டது. அந்தக் கப்பலின் உதவியுடன், லைஃப் ராஃப்ட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 சீன மாலுமிகள் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தேடுதல் வேட்டை:

எஞ்சிய 22 பேரைக் கண்டுபிடிக்க இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்களான 'வரத்', 'அன்மோல்' மற்றும் 'விஜித்' ஆகியவை களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான போயிங் பி-8 என்ற அதிநவீன கடல்சார் கண்காணிப்பு விமானமும் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விசாரணை மற்றும் சவால்கள்:

தென்மேற்குப் பருவமழை காரணமாக வங்காள விரிகுடாவில் தற்போது கடல் சீற்றத்துடன் காணப்படுவது, மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக அமைத்துள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மோசமான வானிலை, அதிகப்படியான சரக்கின் சுமை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து கொல்கத்தாவில் உள்ள மெர்கன்டைல் மரைன் துறை தனது பூர்வாங்க விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்