
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறது. 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு, தனி நாடாக உருவான தினத்தை நினைவுகூரும் வகையில் இந்நாள் அந்நாடு முழுவதும் அரசு விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி:
பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை:
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ் பேரரசு இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்தது. 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய சுதந்திரச் சட்டம்’ மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு தனித்தனி நாடுகள் உருவாக்கப்பட்டன.
அதிகார மாற்றம்:
அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, 1947 ஆகஸ்ட் 14 அன்று கராச்சியில் நடந்த விழாவில் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னாவிடம் அதிகாரத்தை முறைப்படி ஒப்படைத்தார்.
ரமலான் புனித இரவு:
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, 1947-ஆகஸ்ட் 14 அன்று புனித ரமலான் மாதத்தின் 27-வது இரவான 'லைலத்துல் கத்ர்' அமைந்ததால், இது அந்நாட்டு மக்களால் மிகவும் புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது.
கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள்:
துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை:
சுதந்திர தினத்தின் தொடக்கமாக, தலைநகர் இஸ்லாமாபாத்தில் 31 குண்டுகளும், மாகாணத் தலைநகரங்களில் 21 குண்டுகளும் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்படும்.
கொடியேற்ற விழா:
இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்படும். இந்நிகழ்வில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்பு
நினைவிடங்களில் மரியாதை:
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் நினைவிடம் மற்றும் அல்லாமா இக்பால் நினைவிடம் ஆகியவற்றில் பாதுகாப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு மற்றும் சிறப்பு மரியாதைகளைச் செலுத்துவர்.
பொதுமக்கள் கொண்டாட்டம்:
வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் அனைத்தும் பச்சை மற்றும் வெள்ளை நிற விளக்குகளாலும், தேசியக் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். வானவேடிக்கைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
முக்கியத்துவம்:
பாகிஸ்தானின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் நாளாக இந்த சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.