பிரபல நடிகரின் தம்பி மோசடி வழக்கில் கைது…கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை: வேறொருவரின் நிலத்தை ரூ.97 லட்சத்துக்கு விற்றது அம்பலம்..!!

Author: Rajesh
21 March 2022, 11:03 am
Quick Share

கோவை: நில விற்பனையில் ரூ.97 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் சுரேஷ் கோபியின் தம்பியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கேரளத் திரை உலகில் பிரபலமாக உள்ளவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்டப் பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில் கோபி.

இவர் நீதிமன்றம் ரத்து செய்த நிறைய ஆவணங்களை வைத்து நிலத்தை விற்க முயற்சி செய்ததாகக்கூறி, கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று (மார்ச் 20) காலை சுனில் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நில மோசடி குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், ‘சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் பத்திரப்பதிவு செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, சுனில் கோபி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு அதனை விற்றுள்ளார். அந்நிலத்திற்கு கிரிதரன் முன்பணமாக ரூ.97 லட்சம் வெவ்வேறு வங்கிக்கணக்கில் வழங்கிய நிலையில், அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுனில் கோபியைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார்.

ஆனால், அவரிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராததால் சுனில் கோபி மீது கிரிதரன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் மூன்று வங்கிக் கணக்கில் இந்தப் பணத்தை சுனில் கோபி பெற்ற நிலையில், அந்த வங்கிக் கணக்கு உடைய மற்ற 2 பேரின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Views: - 931

0

0