மும்பையில் ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித்.. பாலிவுட் சினிமாவில் நடிக்கிறாரா..?

Author: Rajesh
23 April 2022, 3:04 pm
Quick Share

பேட் பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ், அலி என ஏகப்பட்ட படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் தான் வில் ஸ்மித். இரண்டு முறை ஆஸ்கர் நாமினியாக மாறிய நிலையிலும், 2022 வரை அவருக்கு ஆஸ்கர் விருதே கிடைக்கவில்லை. இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளான வில்லியம் சகோதரிகளுக்கு பயிற்சி கொடுத்த அவர்களின் தந்தை கிங் ரிச்சர்ட்டின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் வில் ஸ்மித்.

அந்த விருது வழங்கும் விழாவில், கிறிஸ் ராக் எனும் காமெடி நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை பற்றி அடித்த கமெண்ட் வில் ஸ்மித்தை கோபத்திற்கு ஆளாக்கியது. மேடை ஏறி ஓங்கி ஒரு அறை விட்டு அசிங்கமாகவும் அவரை திட்டி எச்சரித்தார் வில் ஸ்மித், இந்த விஷயம் உலகளவில் பூதாகரமாக வெடித்த நிலையில், ஆஸ்கர் விழாவே மறந்து போகும் அளவுக்கு அந்த ஒரு அறை டிரெண்டானது.

இதன் காரணமாக நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் நிர்வாகம் 10 ஆண்டுகள் தடை விதித்து அவரது செயலை கண்டித்துள்ளது. ஆனால், ஆஸ்கர் விருதை திருப்பித் தர தேவையில்லை என்றும் கூறியுள்ளது. அந்த நிகழ்வுக்குப் பிறகு வெளியே வராத நடிகர் வில் ஸ்மித் மும்பை கலினா விமான நிலையத்திற்கு வந்து இறங்கி உள்ளார். அப்போது, வெள்ளை உடை அணிந்த நபருடன் அவர் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஏதாவது புதிய படம் அல்லது வெப்சீரிஸ் போன்றவற்றில் வில் ஸ்மித் நடிக்க உள்ளாரா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக மும்பை வந்துள்ளார் என்பது புரியாமல் பலரும் திகைத்து வருகின்றனர். கூடிய சீக்கிரமே வில் ஸ்மித்தின் வருகைக்கான காரணம் தெரிந்து விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Views: - 706

0

0