திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்த மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்… மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்…!!

Author: Babu Lakshmanan
27 May 2022, 11:41 am

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு முதல்வர் திறந்து விட்டப்பட்ட தண்ணீர் தற்போது திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது.

கர்நாடகா மாநிலத்திலும், காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

அந்த தண்ணீரானது சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று நள்ளிரவில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 3454 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் சென்று கொண்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே 24 மதகுகள் வழியாக தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.

மேலும், இன்று காலை மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணைக்கு வந்த காவிரி ஆற்று நீரை அப்பகுதி விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?