டெய்லர் கன்னையா உடலில் 26 இடங்களில் வெட்டுக்காயம்… கொலையாளிகள் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது அம்பலம்!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 2:37 pm
Quick Share

டெய்லர் கன்னையா லாலை கொலை செய்த நபர்களுக்கு, பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது உறுதியாகியுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நுபுர் சர்மா நீக்கப்பட்டார். இவருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கண்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதனால், அவரை பட்டப்பகலில் கடைக்குள் வைத்து இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோ எடுத்து எச்சரிக்கையும் செய்தனர். இதனால், உதய்பூர் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்பு புலனாய்பு குழு கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் பெயர் ரியாஸ் அக்தரி, கௌஸ் முகமது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கன்னையா லால் கொலை சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது கொலையில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உள்ளதா..? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கன்னையா லாலின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கழுத்து, தலை, கை, முதுகு, மார்பு என 26 இடங்களில் கன்னையாவின் உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்தவர்களுக்கு பாகிஸ்தானின் தாவத் இ இஸ்லாமி தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு கொலையாளிகளில் ஒருவன் பாகிஸ்தான் சென்று தீவிரவாத குமபலை சந்தித்து பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 515

0

0