ஆட்சியர் அலுவலகத்துக்கு பில்லி சூனியம் வைத்து பூஜை : புகார் அளிக்க வந்த சாமியாரின் விசித்திர செயலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 4:42 pm

விழுப்புரம் : பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஒருவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த அரசாலபுரம் கிராமத்தை சார்ந்த பூசாரியான ரகுராமன் அப்பகுதியில் உள்ள மலையில் உள்ள பாறைகளை அப்பகுதியை சார்ந்தவர்கள் உரிமம் பெறாமல் உடைத்து வருவது தொடர்பாக கூறி பலமுறை புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் இது தொடர்பாக புகார் அளித்தால் கொன்றுவிடுவேன் என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு மிரட்டுவதாக கூறியும், பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென பூசனிக்காய்க்கு மஞ்சள், விபூதி, சிகப்பினை தூவி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்தார்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாமியாரை அப்புறப்படுத்த அவரிடமிருந்த மனுவை பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர்.

திடீரென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜையில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

  • censor board give 19 cuts to kuberaa movie குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!