‘தமிழிலேயே பேசுங்க’… நயினார் நாகேந்திரன் பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு ; கலகலத்த சட்டப்பேரவை!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 5:50 pm

சென்னை : இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மானம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசிய நிகழ்வால் அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.

மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதுமட்டுமில்லாமல், திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், மீதமுள்ள கட்சிகளுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இந்தி திணிப்பு தீர்மானத்தின் போது பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது, பேச தொடங்கிய நயினார் நாகேந்திரன், சிறிது நிமிடம் மைக் முன்பு அமைதியாக இருந்தார். அப்போது, அவரை கிண்டல் செய்யும் விதமாக, ‘தமிழிலியே பேசுங்க’ எனக் கூறினார்.

சபாநாயகரின் இந்தப் பேச்சை கேட்ட அவையில் இருந்தவர்கள் அனைவரும் கலகலவென சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!