கந்துவட்டி கொடுமை.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழ வியாபாரி : ரூ.70 ஆயிரம் கடனுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் மீட்டர் வட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 9:32 pm
Suicide Attempt - Updatenews360
Quick Share

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞர், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பழமலைநாதர் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மைதீன் மகன் அசாருதீன். திருமணமான இவர் டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஜெகன் பாபுவிடம், கடந்த ஜூன் மாதம் ஐந்து பைசா வட்டியென, 70 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கியுள்ளார்.

பணம் வாங்கிய பிறகு நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் வட்டி என மாதம் 21,000 தர வேண்டும் என, வட்டிக்கு பணம் கொடுத்த ஜெகன் பாபு கூறியதாக சொல்லப்படுகிறது.

அதனால் பழ வியாபாரம் செய்யக்கூடிய, அசாருதீன் மாதம் 21,000 என கடந்த நான்கு மாதங்களாக கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் 50,000 ஆயிரம் அசல் மற்றும் 15000 வட்டி என 65 ஆயிரம் ரூபாய் உடனடியாக, தர வேண்டும் என ஜெகன் பாபு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் இரண்டு மாதம் கால அவகாசம் தருமாறு அசாருதீன் கேட்டுள்ளார். ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்த ஜெகன் பாபு, காலதாமதமானதால், அசாருதீன் வியாபாரம் செய்து வந்த பழ வண்டியை, டாட்டா எஸ் வாகனத்துடன் எடுத்துச் சென்றுள்ளார்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்த அசாருதீன் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில், ஜெகன் பாபு மீது கந்து வட்டி கொடுமை குறித்து நேற்று புகார் அளித்துள்ளார்.

ஆனால் விருத்தாச்சலம் காவல்துறையினர் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த இளைஞர் அசாருதீன், காவல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து, பெட்ரோல் வாங்கிக்கொண்டு, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்து வட்டி கொடுமையால் பாதித்த இளைஞர், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு, இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 399

0

0