பல நாடுகள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம் ; ஆளுநருக்கு அது எல்லாம் தெரியாது : கேஎஸ் அழகிரி கொடுத்த புது விளக்கம்

Author: Babu Lakshmanan
7 January 2023, 1:42 pm

வேலூர் : ராகுல் காந்தி கமலஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்பதாகவும், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, இந்தியா ஒரு தேசம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா வாலிபால் போட்டி என்று துவங்கியது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி குத்து விளக்கு ஏற்றி, வாலிபால் விளையாடியும் துவங்கி வைத்தார்.

இந்த விழாவில் youtube புகழ் ஜிபி முத்துவும் கலந்து கொண்டார். இப்போட்டியில் தமிழக முழுவதிலும் இருந்து மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேஎஸ் அழகிரி கூறியதாவது :- ஆளுநர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார். தமிழகத்தை எப்படி அழைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும். தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு.

இது போன்ற பல நாடுகள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம், இந்திய ஒன்றியம். இது அரசியல் சட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரநாடு என பல சமஸ்தானங்கள் சேர்ந்ததுதான் இந்தியா. இந்தியா என்ற ஒரு நாடு இல்லை, இந்தியா ஒரு தேசம்.

நாடு என்பது வேறு, தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம் என்று நாம் சொல்லுகிறோம். இவையெல்லாம் ஆளுநருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. ஆளுநர் கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்களின் திருவிழாக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா என பாஜகவினர் கேட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை இந்து பண்டிகை தான். இதற்கு நாம் வாழ்த்து கூறுகிறோம். நாம் தான் இந்து மதத்தில் உள்ளோம், நாம்தான் இந்து மதம். இந்து பண்டிகைகளை முதலமைச்சர் புறக்கணிப்பாரா எனக் கூறுவது, இந்த நாட்டில் கலவரத்தை பாஜக உருவாக்க விரும்புகிறார்கள்.

பாஜக பொங்கல் பண்டிகையை, இந்து பண்டிகைகளாக கருதவில்லை, இந்து கலாச்சாரமாக கருதவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் வேறு கலாச்சாரத்தில் உள்ளனர். கமல்ஹாசன், ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. கமல்ஹாசன் தேசிய உணர்வுடைய தலைவர், நல்ல மனம் படைத்தவர், சீர்திருத்த கருத்துகளை உடையவர்.

இன்றைய நிலையில் ராகுல் காந்தி போன்ற தலைவர் தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடு தான் அவருடைய அவர் நடை பயின்று உள்ளார். அவரோடு கருத்து பரிமாற்றத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி கமலஹாசன் சந்திப்பு தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது பாராட்டுகிறது, என்று கூறினார்.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…