பொறுமை ஒரு எல்லை வரைக்கும் தான்… ஆளுநர் நினைத்தால் திமுக அரசின் மானம் போய்விடும் : அண்ணாமலை எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
14 January 2023, 12:12 pm

திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிப்பதாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்து சமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பிலும் 19வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:- சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும், ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றி பெற்று சென்ற காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் இந்துமக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும் வரை இந்த பிரச்சினையை விடப்போவதில்லை.

தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நுண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏன்..? எதற்காக..? வழங்கப்பட்டது என மத்திய அரசிடம் கேட்கப்போவதில்லை. அதேவேளையில் கட்சியில் செய்ய வேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என நினைக்கிறேன்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரியது. அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாகவே இடைத்தேர்தல் நடத்த திமுக அரசு அவசரப்படுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை.

தனியார் துறையில் ஆண்டிற்கு பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், அரசுத் துறையில் 3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்த 20 மாதங்கள் ஆகியுள்ளது. மொத்த ஆட்சியில் 3ல் ஒரு பங்கு முடிந்துள்ள நிலையில், இதுவரையிலும் வேலைவாய்ப்புகளை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வு நடைபெற்று ஆறு மாதங்களாகியும், அதன் முடிவுகளை வெளியிடாத அரசு, எப்படி வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். திமுகவுக்கும் எப்போதும் எதிரி வேண்டும். திரைப்பட அரசியல்படி, திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல், திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது.

ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுப்புது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை. திமுகவினர் ஆளுநரை சீண்டி வருகின்றனர். மேற்குவங்கம், கேரளாவை போல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால், அரசின் மானம் நிலைகுலைந்துவிடும்.

தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக்கொண்டிருந்தால் ஆளுநர் அமைதி காப்பார் என்பதை கூற இயலாது. 2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும். திமுகவை போல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்காது. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை ஆகியவைகளில் பிரச்சினை இருக்கதான் செய்கிறது. எனினும், ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும், என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம் ஆர் காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…