அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து : எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 11:58 am

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (மார்ச்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருவர் பெயரில் மட்டுமே அனைத்து மனுக்களும் தாக்கலாகி இருந்ததால், போட்டியின்றி அவர் தேர்வாகும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி காலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அன்று மாலையே அவர் கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வரும் 7ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

  • censor board give 19 cuts to kuberaa movie குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!