இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் மாற்றம்… அதிமுக கூட்டணிக்கு தாவப் போகும் கட்சிகள் ; ஜிகே வாசன் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 5:06 pm

மதுரை ; இன்னும் சில மாதங்களில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் G.K. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : பீகாரில் எதிர்க்கட்சிகளில் கூட்டமானது முரண்பாடுகளின் கூட்டமாகவே இருக்கிறது. பீகார் பாட்னாவில் சில எதிர்க்கட்சிகள் பாஜகவை அரசை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக கூட்டப்பட்டிருக்கிறது. இந்த கூட்டம் முடிவில்லா தொடர்கதையாக இருக்கின்ற வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூடியிருப்பது அந்தந்த மாநிலத்தில் பாஜகவை வெல்ல முடியாது என்ற பயத்தால் கூடியிருக்கிறார்கள்.

பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் சில மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்களது பாராளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுக்கின்ற நிலையில் இல்லை. எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது ஒட்டுமொத்த முரண்பாடுகளின் கூட்டமாகவே இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுக தலைமையிலான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மொத்த கருத்துடைய கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை திமுக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிகமான இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறது.

ஆளுங்கட்சியின் தவறான செயல்களால் எதிர்மறை வாக்குகள் எதிர் கட்சிகளுக்கு சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி கட்சியினர், அதிகமாக வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தொடர்ந்து திமுக அரசு மக்கள் மீது சுமைகளை ஏற்றுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பால் கட்டணம், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர் விரத போக்கு என்று சீர்குலைந்த நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் போதைப் பொருள்கள் எங்கும் கிடைக்கின்ற நிலை இருக்கிறது.

டாஸ்மாக் மூடு விழா நடத்தினால் மட்டுமே சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியும். அரசியல் பொறுப்பில் இருப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தவறு செய்யும் போது அதை சட்டம் தட்டி கேட்டால் அதை இந்த அரசு தவறு செய்தவர்களை நிரபராதியாக்கும் நிலையை உருவாக்குகிறது. இதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள். பிரதமரின் அமெரிக்க பயணம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அடித்தளம் பெற்றிருக்கிறது.

வரும் காலங்களில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அமெரிக்காவிற்கு செல்லும் பொழுது மிகுந்த மரியாதை ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்க பிரிவு நடவடிக்கை எடுத்தால் சரி என்று சொல்கிற ஆளுங்கட்சி பொறுப்பில் இருக்கும் ஆளுங்கட்சி நபர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமலாக்க பிரிவு நடவடிக்கை எடுத்தால் தவறு என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

ஆளுங்கட்சியின் செல்வாக்கு குறைவதினால் கவர்னரின் கருத்துக்கு ஆளுங்கட்சி மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றுகிறது, என்றும் தெரிவித்தார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?