சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மோப்ப நாயுடன் வந்து போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 10:34 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட டையாளம் தெரியாத நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டனை என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் மிரட்டல் விடுத்த மணிகண்டன் மனநல பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன், மனநல பாதிக்கப்பட்ட மணிகண்டன் பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து உடனடியாக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் மிரட்டல் விடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!