இந்தியா முழுவதும் விடியல் அளிப்பது இருக்கட்டும்… முதல்ல கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி கொடுங்க ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 8:45 am

முதலமைச்சர் இந்தியா முழுவதும் விடியலை அளிப்போம் என கூறி உள்ளார் என்றும், முதலில் கர்நாடகாவில் இருந்து அவர் தண்ணீர் வாங்கி கொடுக்கட்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் வள்ளலார் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலங்கானா ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், பள்ளியில் வள்ளலாரின் அணையாஜோதி ஏற்றப்பட்டதை முக்கியமான விஷயமாக கருதுகிறேன். கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் நாம் தவித்தோம். உலகிலேயே அதிக இறப்புகளை கொண்ட நாடாகவும், பாதிப்புக்குள்ளாகும் நாடாகவும் இந்தியா இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது. கொரோனா தடுப்பூசி மற்றும் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் அரிசி வழங்கப்பட்டதால் 40 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என லாண்ட்செட் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிறுவிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவை வணக்கத்துக்குரிய ஒரு கோளாக நாம் பார்த்து வருகிறோம். வேறு நாடுகளில் இது கிடையாது. தஞ்சையில் சந்திரனுக்கென்று கோயில் உள்ளது. நவகிரகத்தில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால்தான் தென் துருவத்தில் ரஷ்யாவை அனுமதிக்காத நிலவு இந்தியாவை அனுமதித்துள்ளது. உலகில் பல நாடுகள் விஞ்ஞான பெருமிதம் பேசிய காலத்தில் இவையெல்லாம் நடக்கிறதென்றால் இந்த புண்ணிய பூமி. இங்கு ஒரு குறிக்கோளை முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

சந்திரனுக்கு வெற்றிகரமாக சென்றுள்ளோம் என்பதை விட இந்தியா தற்போது சூரியனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல வளர்ந்த நாடு. வள்ளலாரின் கருத்துகள் நமக்கு வழிகாட்டுகிறது. மாணவர்கள் அன்றைய பாடத்தை அன்றே கற்க வேண்டும். எனக்கு சிறிய வயதில் இருந்தே அரசியல்வாதியாக வேண்டும் என்றுதான் ஆசை. அம்மாவிற்காக மருத்துவரானேன். அம்மா கூறியதை கேட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு நான் உதாரணம். நமக்குனு ஒரு தொழில் இருந்து ஊதியம் இருந்தால்தான் மற்றொருவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டோம் என கூறினார்.

பணமதிப்பிழப்பு வந்த போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையா என என்னை கேட்டனர். நான் பிரச்சினையில்லை எனக் கூறினேன். அதற்கு மோடி உங்களுக்கு முன்னாடியே கூறிவிட்டார எனக் கேட்டனர். அவர் சத்தியவான் எனக் கூறினேன். அதனால், உலகுக்கு தெரியும் போதுதான் எனக்கும் தெரிந்தது. அப்போது கூறினேன், என்னிடம் உள்ளது நான் மருத்துவராக இருந்தபோது சம்பாதித்த சிறிய அளவிலான பணம் இருந்தது. எனது கோட்டும் ஒயிட். என்னிடம் உள்ள நோட்டும் ஒயிட்டும் என்பதால் கவலையில்லை என கூறினேன்.

கலாச்சாரம், பண்பாட்டை விவேகானந்தர் பள்ளி கற்று கொடுக்கிறது. ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி நாத்திகவாதிகளும் பின்பற்றினார்கள் என்பதே வள்ளலாரின் சிறப்பு. எந்தவிதத்திலும் என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் என்னை உருவகேலி செய்தனர். என்னை உருவகேலி செய்தவர்கள் எல்லாம் வெட்கித் தலைக்குணிய காரணம், இத்தகைய தலைவர்களை படித்ததுதான் காரணம். படிப்பு நோக்கத்திற்காக மகிழ்ச்சியை தொலைத்து விடாதீர்கள், என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது :- வள்ளலாரின் அணையா ஜோதியை விவேகானந்தர் பள்ளியில் ஏற்றி வைத்ததில் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் விருப்பம். பிரதமர் மோடி கொரோனா காலத்தில் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் அரிசி வழங்கப்பட்டதால் வறுமையிலும் கொரோனா காலத்தை கடந்து வந்தனர். இந்தியாவின் தடுப்பூசியால் 40 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. சந்திரயானில் கால்பதித்துள்ளோம். சூரியனை நெருங்க உள்ளோம். சந்திரயான் வணங்கினோம். தற்போது சந்திரனை நெருங்கி கொண்டுள்ளோம்.

சந்திரனில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி சிவ சக்தி பெயரிட்டது. சிவசக்தி என்பது சக்தியின் வடிவம். அனைவரிடமும் சக்தி உள்ளது. இந்து மதத்தினரிடம் சார்ந்தது இல்லை. சிவ சக்தி உலகை இயக்கி கொண்டிருக்கிறது என நம்புகிறோம்

இந்து மத கோயில்களில் உண்டியலில் அளிக்கும் பணத்தை யாரும் கோவில்களுக்கு பயன்படுத்துவது இல்லை. அப்போது யாரும் அதுபற்றி கேட்பதில்லை. சிவசக்தி என பெயரிட்டதை நான் மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. கருத்து சார்ந்ததாக பார்க்கிறேன். சிவனும் சக்தியும் இந்த உலகில் சக்தி வாய்ந்தது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அனைவரும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்கள்தான் விமர்சிக்கின்றனர்.

சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியானது மோசடி இல்லை. நீண்ட நாட்களுக்கு முன் திட்டமிட்டதைவிட கூடுதலாக செலவளிக்கப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊழலை தடுத்தவர். மோடி இருக்கும் போது ஊழல் நடக்காது. சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியது ஊழல் என கூற முடியாது. தெளிவான கருத்து கூறப்படும். முதலமைச்சர் இந்தியா முழுவதும் விடியலை அளிப்போம் என கூறி உள்ளார் .முதலில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி அளிக்கட்டும் எனத் தெரிவித்தார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!