விஜய்க்கு மட்டுமா? ராகுலுக்கும் தான்.. அதிகாரப்பகிர்வில் அக்கணம் வைத்த செல்வப்பெருந்தகை!

Author: Hariharasudhan
1 November 2024, 4:29 pm

ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கேட்டிருந்தாலும், அதனை திமுக கொடுத்திருக்கும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று (நவ.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது? ராகுல் காந்தி வந்தபோது அதிக கூட்டம் கூடியது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் அதிகாரப்பகிர்வு கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இப்போது இந்தியா கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இந்தக் கூட்டணியில் எந்தச் சலனமும், சங்கடமும் இல்லை.

2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது. எனவே, அதிகாரப்பகிர்வு குறித்த தொண்டர்களின் உணர்வுகளை கட்சித் தலைமைக்கு நாங்கள் கொண்டு செல்வோம். கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை. அவர்கள் தான் அது குறித்து முடிவெடுப்பர். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அன்றைக்கு முதலமைச்சராக கருணாநிதி இருக்க வேண்டும் என நிபந்தனை இன்றி ஆதரவு கொடுத்தவர் சோனியா காந்தி. அன்று ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கேட்டிருந்தாலும், அதனை திமுக கொடுத்திருக்கும். மேலும், ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சி தொடங்கியதாக நிலவும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, “இதை அவரிடம் (விஜய்) தான் கேட்க வேண்டும். யார் சொல்லி நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள்? என விஜய்யிடம் கேளுங்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் தை பிறந்த உடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வர். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால், நாட்டில் புரட்சி ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் மூலம் பல முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழும் என தகவல்கள் வெளியாகின. இதன்படி, விஜயின் மக்கள் இயக்கத்தை காங்கிரஸ் உடன் இணைப்பது அல்லது காங்கிரஸில் விஜய் சேர்வது அல்லது தமிழ்நாட்டில் காங்கிரஸ் இளைஞர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்குவது என கருத்து நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓவனில் கிடந்த இந்தியப் பெண்ணின் உடல்.. கனடாவில் கொடூரம்!

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!