ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?

Author: Hariharasudhan
29 November 2024, 10:54 am

தனக்கு ராகவா லாரன்ஸ் தெரியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கடந்த நவம்பர் 4ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது, ‘நான் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர். ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுக்கிறோம்.

அதற்காக 8 ஆயிரத்து 675 ரூபாய்பணத்தை அனுப்புங்கள்’ எனக் கூறினார். இதனையடுத்து ‘இந்தப் பணம் எதற்கு? எனக் கேட்டபோது, ‘எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் இந்தத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பின்னர், இதனை நம்பி போன் பே மூலம் அவர் கூறிய பணத்தை அனுப்பினேன். இதனையடுத்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு அந்த நபர், ‘ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அதற்காக மேலும் 2 ஆயிரத்து 875 ரூபாய் அனுப்புங்கள் எனக் கூறினார். அதனையும் நம்பிய நான், மீண்டும் பணத்தை அனுப்பினேன்.

பின் எனக்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் என்னைத் தொடர்பு கொண்ட அவர், ‘50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தால் உங்கள் குழந்தையின் மொத்த படிப்புச் செலவையும் எங்களின் தொண்டு நிறுவனமே பார்த்துக் கொள்ளும்’ எனக் கூறினார்.

Cheating in the name of Raghava Lawrence

மீண்டும் அதனையும் நம்பிய நான் மேலும் 50 ஆயிரம் பணத்தைச் செலுத்தினேன்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அந்த நபர் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வீரராகவன், எழும்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து உடனடியாக புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார், அந்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு சென்ற போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவனுக்கு மது வாங்கி கொடுத்த 8ஆம் வகுப்பு மாணவன்… கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்!

இந்த விசாரணையில், அந்த மர்ம நபர் வேலூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதற்காக இப்படிச் செய்தார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • adhik ravichandran salary details leaked for next film with ajith kumar அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!