உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சோதிக்கும் ரெட் அலர்ட்.. எச்சரிக்கையில் தென்மாவட்டங்கள்!
Author: Hariharasudhan13 December 2024, 3:55 pm
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதேநேரம், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது.
இது நாளை (டிச.14) காலை 9 மணியளவில் மேற்கு – வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை மேலடுக்கு சுழற்சி உருவாகிறது எனத் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, இன்று தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பழனியில் கொட்டித் தீர்த்த கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்.. கடும் அவதியில் மக்கள்!
அதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
