வீட்டு பெண்களுக்கே துரோகம்.. எப்படி மனசு வருது? பிரபல சூப்பர் மார்கெட் உரிமையாளரின் மகன் கைது!
Author: Udayachandran RadhaKrishnan9 May 2025, 10:32 am
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் அவரது மகனான அஜய் கண்ணன் என்பவர் சமூக ஊடகங்களில் இளம் பெண்களை நட்பாக பழகி அவர்களது புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி வரும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இதன் இடையே கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த அஜய் கண்ணனின் நெருங்கிய உறவினர் ஒருவர் அஜய் கண்ணனை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த அஜய் கண்ணன் அவர்களது செல்போன் எண்ணையும் தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு சில தளங்களில் பரப்பி உள்ளார்.
இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்த எண்களில் அழைத்து பேசவே மனம் உடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் அஜய் கண்ணனை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அஜய் கண்ணன் இதே போன்று சென்னையில் உறவினர் முறை பெண்களை தவறாக சித்தரித்து காவல் துறையில் சிக்கியதும், பல இடங்களில் இளம் பெண்களை குறி வைத்து அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.