கோவை டூ காஷ்மீர் : ‘துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள்’ என்ற முழக்கத்துடன் 100 இருசக்கர வாகனங்கள் பேரணி!
Author: Udayachandran RadhaKrishnan2 June 2025, 5:32 pm
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சலோ எல்ஓசி (Chalo LOC) என்ற புதிய சமூக அமைப்பு, அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் ஒரு மாபெரும் புல்லட் பைக்கர் பேரணியை ஆரம்பித்து உள்ளது.
கேரளாவின் ஆன்மீகத் தலம் காலடியில் இருந்து தொடங்கி, ஜம்மு – காஷ்மீரின் எல்லை அருகே உள்ள டீட்வாலில் உள்ள சாரதா யாத்ரா க்ஷேத்ராவில் நிறைவடையும் இந்தப் பேரணி, சுமார் 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க உள்ளது.
துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன்,இந்த பயணம் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியையும், நாட்டின் மீள் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த புல்லட் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பங்கேற்கின்றன. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அப்பகுதியில் அமைதி நிலை திரும்ப வேண்டுமென்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் வகையிலும், இந்த அமைதிப் பயணம் நடத்தப்படுகிறது.
இந்த பயணத்தின் வழித் தடம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் கடந்து வருகிறது. ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடமான காலடியில் இருந்து தொடங்கி, டீட்வாலில் அமைந்து உள்ள சாரதா யாத்ரா க்ஷேத்ரத்தில் முடிவடையும் இந்த பாதை,இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு வரை ஆன்மீக ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.
சாரதாபீடம் தற்போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும், டீட்வாலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த யாத்திரை மையம், அந்த புனிதத்தின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.இந்த பயணம் ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி, இன்று கோவை வழியாக சென்றனர், ஜூன் 12 அன்று முடிவடைகிறது.
பயணத்தின் போது, கேரளாவின் பசுமையான சமவெளிகளில் இருந்து காஷ்மீரின் பனிமலையுகள் வரை, இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகள் ஊடாக பைக்கர்கள் பயணம் செய்கிறார்கள். ஒவ்வொரு கிலோ மீட்டரும் நாட்டின் ஒற்றுமையையும், ஆன்மீக அடையாளங்களையும் கொண்டாடும் ஒரு கட்டமாக இருக்கிறது.
இந்த இயக்கம், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு அணியாய் நிற்க வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு வந்து, அமைதி, ஒற்றுமை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
புல்லட் பைக்குகள் கர்ஜிப்பது இனி வன்முறைக்கு பதிலாக அமைதிக்காக என்றும், பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக என்றும் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.