லியோ படத்தில் 35 லட்சம் முறைகேடு? நடன இயக்குனர் தினேஷை கட்டம் கட்டும் டான்சர்கள்?
Author: Prasad5 June 2025, 5:12 pm
தேசிய விருது வாங்கிய நடன இயக்குனர்
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர்தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். குறிப்பாக “ஆடுகளம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒத்த சொல்லால” என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியவர். இவரது நடன அமைப்பே மிகவும் தனித்துவமாக இருக்கும்.
இவர் தற்போது தமிழ்நாடு டான்ஸர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த நிலையில்தான் இவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன.

ரூ.35 லட்சம் முறைகேடு
“லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ரெடிதான்” என்ற பாடலை நம்மில் பலரும் ரசித்து பார்த்திருப்போம். அந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ்தான். அப்பாடலில் 1500 டான்சர்கள் நடனமாடியிருந்தனர். இந்த நிலையில் இப்பாடலில் நடனமாடிய 1500 டான்சர்களுக்கும் சரியாக ஊதியம் தரப்படவில்லை எனவும் அந்த 1500 டான்சர்களை நடனமாட வைப்பதற்காக தினேஷ் வாங்கிய ரூ.35 லட்சத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் டான்சர் சங்கத்தில் உள்ள பலரும் தினேஷ் மீது புகார் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “லியோ படத்தில் 1500 டான்சர்கள் நடனமாடியிருந்தாலும் அதில் நடன சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 500 பேர்தான். மீதி 1000 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நடன சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 500 பேருக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1000 பேருக்கு சம்பளம் கொடுப்பது குறித்து லியோ தயாரிப்பாளரும் பெப்சி அமைப்பும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஒரு பாடலுக்கு நடனம் அமைப்பது என்பது மிகவும் கடினம். இயக்குனருக்கும் பிடிக்க வேண்டும், தயாரிப்பாளருக்கும் பிடிக்க வேண்டும். அதை விட முதலில் நடிகருக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட டென்சனில் இருந்தவனிடம் சம்பள விவகாரத்தை எடுத்துக்கொண்டு வருவது சரியல்ல” என விளக்கம் கொடுத்துள்ளார்.
ரூ.35 லட்சம் முறைகேடு மட்டுமல்லாது பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனரின் மீது தினேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.