ஊழியரை கடத்தி மிரட்டல்? பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் : போலீசார் வழக்குப்பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2025, 3:35 pm
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் தியா கிருஷ்ணா. திருவனந்தபுரம் கவடியாரில் ஆபரணம் மற்றும் துணிக்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தியா-வின் கடையில் வேலைசெய்த பெண் ஊழியர் 2024-ம் ஆண்டு முதல் கியூ ஆர் கோடு மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடை ஊழியர்கள் மீது தியா கிருஷ்ணா புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மகள் தியா ஆகியோருக்கு எதிராக பெண் ஊழியர் ஒருவர் மியூசியம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில், பெண் ஊழியரை கடத்தி அடைத்து வைத்து மிரட்டி 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் போலிஸிடம் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகிறது.
பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணகுமார், அவரது மகள் தியா ஆகியோர் மீது மியூசியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தர்அப்பில் கூறுகையில், “தியா- தனது கடையில் உள்ள ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனக்கூறி, ஊழியர்களின் எண்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் அனுப்பச் சொன்னதாகவும், பின்னர் அந்த பணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். வரியில் இருந்து தப்புவதற்காக இப்படி செயல்பட்டதாக சொல்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
ஊழியர்களின் புகாரை நடிகர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், நிறுவன கியூ ஆர் கோடு செயல்படவில்லை என வாடிக்கையாளர்களிடம் கூறியதுடன், வேறு கியூ ஆர் கோட் மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அந்த குற்றத்தை சம்மதித்த ஊழியர்கள் எங்கள் பிளாட்டுக்கு வந்து 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திரும்ப தந்தனர்.
அதுசமந்தமான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. அவற்றை போலீஸார் எடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தராமல் பெண்கள் தரப்பில் மிரட்டல் விடுத்ததை அடுத்தே நாங்கள் புகார் அளித்தோம்.
ஆனால், நாங்கள் அவர்களை கட்டியிட்டு மிரட்டியதாக இப்போது பொய்யாக புகார் அளித்துள்ளனர். நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்” என்றார்.