இதுதான் கடைசி, இனி நடிகர்கள் மீது அவதூறு பரப்பினால் அவ்வளவுதான்? பயில்வானை எச்சரிக்கும் நடிகர் சங்கம்
Author: Prasad1 July 2025, 1:37 pm
சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர்
சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது பத்திரிக்கை துறையிலும் மூத்த பத்திரிக்கையாளராக இருப்பவர் பயில்வான் ரங்கநாதன். சமீப காலமாக பல யூட்யூப் சேன்னல்களில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை குறித்து பேசி வருகிறார் இவர். இதன் காரணமாக இவரது பேச்சுக்கு பல நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “பயில்வான் ரங்கநாதன் தேவையில்லாமல் எங்கள் மீது அவதூறு கிளப்பு வருகிறார்” என குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அவர் மட்டுமல்லாது பத்திரிக்கையாளர் சேகுவேரா என்பவர் மீதும் இந்த குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரையும் எச்சரிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இனி இப்படி நடந்துகொண்டால் அவ்வளவுதான்?
அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும் ஆபாசமாகவும் அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி, பல தவறான பொய்யான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவேரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் எனும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என குற்றம்சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் அந்த உறுதிமொழியில் இருந்து அவர் சற்றும் தவறக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில் அந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதை தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில் சமீப காலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர்.
அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்தவேண்டும். அதனை தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “இனி ஒருமுறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறு கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.