சொகுசு காரை ஓட்டிய போலி ஆக்டிங் டிரைவர்.. லாட்ஜில் ரூம் போட்டு கார் ஓனருடன் விருந்து.. நொடியில் நடந்த சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2025, 11:34 am
திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர், அருள்மொழி கேரளாவுக்குச் செல்வதற்காக தனது சொகுசு காரில் சென்று உள்ளார்,
அப்போது,கோவை கருமத்தம்பட்டி – சோமனூர் சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் மது அருந்தியுள்ளார். அதிக போதையில் இருந்ததால், காரை ஓட்ட முடியாமல் ஆக்டிங் டிரைவரை தேடியுள்ளார்.
அப்போது, அதே இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த வாகராயம்பாளையத்தைச் சேர்ந்த சியாஸ் (32), தன்னை ஆக்டிங் டிரைவர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர், இருவரும் இணைந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர்.பிறகு கேரளா செல்லும் திட்டத்தை மாற்றி, கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இரவு உணவுக்காக கருமத்தம்பட்டி-அவிநாசி சாலையில் உள்ள உணவகத்துக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின்போது, சியாஸ் பசியில்லை எனக் கூறி காரிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். அருள்மொழி சோழன் உணவு உண்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, சியாஸையும் காரையும் காணவில்லை.
உடனடியாக சியாஸை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, பக்கத்தில் இருக்கிறேன், வந்துவிடுகிறேன் எனக் கூறியவர், பிறகு அலைபேசியை அணைத்துவிட்டார்.
இதையடுத்து, அருள்மொழி சோழன் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சியாஸின் அலைபேசி சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் சத்தியமங்கலம், பண்ணாரி பகுதியில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், சியாஸைக் கைது செய்து, காரையும் மீட்டனர். பின்னர், சியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
