ஆம்பூர் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு… 22 பேர் குற்றவாளிகள் : தண்டனை விபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 6:52 pm
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா (25) கடந்த 2015 மே 24-ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, அவரை மீட்கக் கோரி பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவரிடம் 2015 ஜூன் 15-ஆம் தேதி பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 6 போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், விசாரணைக்குப் பின் ஷமீல் அகமது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை என மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.கலவரத்தில் திருப்பம்: 2015 ஜூன் 27-ஆம் தேதி இரவு 7 மணியளவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு, போலீசாரைக் கைது செய்யக் கோரி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் தொடர்புடைய 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு, 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.நீதிமன்ற தீர்ப்பு: இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு, எஸ்.பி.க்கள் சியாமளாதேவி (திருப்பத்தூர்) மற்றும் மயில்வாகனன் (வேலூர்) தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் குவிக்கப்பட்டனர். ஆனால், நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்று (ஆகஸ்ட் 28) நீதிபதி மீனாகுமாரி அளித்த தீர்ப்பில், 22 பேருக்கு 3 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
