கலைமாமணி விருதுக்கு பதிலா கொலைமாமணி விருது கொடுங்க.. வள்ளிகும்மியை தடை செய்யுங்க.. கொந்தளிக்கும் விசிக..!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2025, 2:29 pm
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு நேற்று தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தது. நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் கலைமாமணி விருது அறிவிக்கப்ப்டடது.
இதனிடையே நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கேகேசி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவருக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும், கலைமாமணிக்கு பதிலாக கொலைமாமணி விருது கொடுக்கலாம் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை,இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.
இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக திரு.வீர சங்கரும்,பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக திருமதி காமாட்சி அவர்களும் நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக திரு.மருங்கன்,
பெரிய மேளத்துக்காக திரு. முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.

இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கேகேசி பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வள்ளி கும்மி மூலம் “வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்” என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு. இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும்.
பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும். அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் திரு.கேகேசி பாலு அவர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
ஆகவே,தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஸ்டாலின் பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
