அண்ணனுக்கு 30 லட்சம் Bill-அ போடு- விக்ரம் படத்தின் பாடலால் தயாரிப்பாளருக்கு வந்த வினை!
Author: Prasad13 June 2025, 7:11 pm
ஒரு பாட்டு வச்சது குத்தமா?
சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பையே பெற்றது. இத்திரைப்படத்தில் “தூள்” படப் பாடலான சிங்கம் போல என்ற பாடல் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்பாடலால்தான் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

விட்டதை பிடித்த விநியோகஸ்தர்
2016 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இருமுகன்”. இத்திரைப்படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவர் தயாரித்திருந்தார். ஆனால் முதலில் இத்திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கியது ஐங்கரன் நிறுவனத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி. இவர் “இருமுகன்” திரைப்படத்திற்காக ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தாராம்.
ஆனால் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே இத்திரைப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை விக்ரம், ஷிபு தமீன்ஸுக்கு அளித்துவிட்டாராம். அந்த வகையில் கருணாமூர்த்தி தான் முதலீடு செய்த ரூ.50 லட்சத்தை திரும்பக் கேட்டாராம். அப்போது ஷிபு தமீன்ஸ் ரூ.25 லட்சம் மட்டுமே கருணாமூர்த்திக்கு தந்தாராம். மீதி 25 லட்சம் பணத்தை பின்னாளில் தருவதாக கூறினாராம்.

ஆனால் “இருமுகன்” திரைப்படம் சரியாக போகாத காரணத்தால் கருணாமூர்த்தி அந்த பாக்கி ரூ.25 லட்சம் பணத்தை அப்போது கேட்கவில்லையாம். ஷிபுவும் தரவில்லையாம்.
இந்த நிலையில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார். ஆனால் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “தூள்” பட பாடலான “சிங்கம் போல” என்ற பாடலின் வெளிநாட்டு ஆடியோ உரிமம் ஐங்கரனிடம் உள்ளதாம்.

அந்த வகையில் “சிங்கம் போல” பாடலை “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தில் பயன்படுத்தியதற்காக ஷிபுவிடம் ரூ.5 லட்சம் கேட்டாராம் கருணாமூர்த்தி. மேலும் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு “இருமுகன்” படத்திற்காக ஷிபு கொடுக்க வேண்டிய பாக்கி ரூ.25 லட்சத்தையும் சேர்த்து கேட்டாராம் கருணாமூர்த்தி. இந்த நிலையில் ஷிபுவும் வேறு வழியில்லாமல் இரண்டையும் சேர்த்து ரூ.30 லட்சத்தை கருணாமூர்த்தியிடம் கொடுத்தாராம். இவ்வாறு ஒரு பாடலை பயன்படுத்தியதற்காக ரூ.30 லட்சத்தை தந்துள்ளார் “வீர தீர சூரன் பார்ட் 2 “ தயாரிப்பாளர்.
