கன்னட மொழி விவகாரத்தில் மன்னிப்பு? கமல்ஹாசன் வெளியிட்ட திடீர் அறிக்கை!
Author: Prasad3 June 2025, 2:05 pm
மன்னிப்பு கேட்க முடியாது
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியதை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகளும் அரசியல் பிரபலங்களும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என போர் கொடி தூக்கினர். ஆனால் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறவே கர்நாடக பிலிம் சேம்பர் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் “தக் லைஃப்” மீதான தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ கமல்ஹாசன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என 2.30 மணிவரை கெடு விடுத்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுவுக்காக ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது…
கமல்ஹாசன் வெளியிட்ட அந்த கடிதத்தில், “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை குறித்து அன்பின் மிகுதியால் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. நம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் எனது பேச்சுக்கள் குறிப்பிட்டனவே தவிர அதில் கன்னட மொழியை குறைத்து பேசியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
தமிழை போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை. கன்னடர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நேசித்து வருகிறேன். கன்னடர்கள் தங்களது கன்னட மொழி மீது வைத்திருக்கும் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.
எனது பேச்சால் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் சிவராஜ்குமாருக்கும் எனக்கும் இடையிலான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும்.
சினிமா என்பது மற்றவர்களுக்கு இடையிலான பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிவினை ஏற்படுத்தும் சுவராக இருக்கக்கூடாது. இதுதான் எனது கருத்தின் நோக்கமாக இருந்ததே தவிர பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ பகைமையை ஏற்படுத்தவோ அல்ல. இந்த தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று தற்காலிமானதுதான் என நம்புகிறேன். இது நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாகவும் நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.