ஏமாற்றமடைந்த சிவகார்த்திகேயன், மன்னிப்பு கேட்ட ஆமிர்கான்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்ன?
Author: Prasad6 June 2025, 4:00 pm
ஆமிர்கான் படத்தில் சிவகார்த்திகேயன்
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் ஆமிர்கான். எனினும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த எந்த திரைப்படமும் சரியாக போகவில்லை. இந்த நிலையில் தற்போது “சித்தாரே ஸமீன் பர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை ஆர் எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். இவர் தமிழில் “கல்யாண சமையல் சாதம்” என்ற திரைப்படத்தை இயக்கியவர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஆமிர்கான், “சித்தாரே ஸமீன் பர்” தமிழ்ப்பதிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாக ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்
“சித்தாரே ஸமீன் பர்” திரைப்படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாக கூறிய ஆமிர்கான் தான் நடித்த “லால் சிங் சத்தா” திரைப்படம் தோல்வியடைந்ததால் அந்த சமயத்தில் மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “சித்தாரே ஸமீன் பர் படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன். என்னுடைய மனநிலையை குறித்து அறிந்துகொண்ட இயக்குனர் ‘நடிக்க விருப்பமில்லை என்றால் இத்திரைப்படத்தின் தயாரிப்பு பணியில் ஈடுபங்கள்” என கூறினார். அதன்படி ஹிந்தி பதிப்பில் ஃபர்ஹான் அக்தரும் தமிழ் பதிப்பில் சிவகார்த்திகேயனும் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அவர்களும் இத்திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அத்திரைப்படத்தின் கதையை தினமும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஏன் இந்த படத்தில் நாம் நடிக்கக்கூடாது என தோன்றியது. இதனை இயக்குனரிடம் கூறியபோது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பின் ஃபர்ஹான் அக்தரிடமும் சிவகார்த்திகேயனிடமும் மன்னிப்பு கேட்டேன். அவர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும் என் நிலையை புரிந்துகொண்டனர்” என்று கூறினார். ஆமிர்கான் பகிர்ந்துகொண்ட இத்தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.